
சன் பிக்சர்ஸ் வழங்கியுள்ள படம் தீராத விளையாட்டு பிள்ளை. இதில் விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நீது சந்திரா, சாரா ஜென், தனுஸ்ரீ தத்தா ஆகியோர் நடித்துள்ளனர். திரு இயக்கியுள்ளார். இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இப்படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், கோவையில், தீராத விளையாட்டு பிள்ளை படம் ஓடும் தியேட்டர்களுக்கு விஷால் நேற்று விசிட் அடித்தார். முதலில் கே.ஜி. பிக் சினிமாஸ் தியேட்டருக்கு சென்றார். அவரை தியேட்டர் மேலாளர் ஸ்ரீநாத் வரவேற்றார். கோபுரம் பிலிம்ஸ் விநாயகர் மணி சால்வை அணிவித்தார். தியேட்டருக்கு வெளியே திரண்டிருந்த ஏராளமான ரசிகர்கள் தாரை தப்பட்டை அடித்தும், வாண வேடிக்கை நடத்தியும் விஷாலை வரவேற்றனர். காலை காட்சி படம் ஓடிக்கொண்டிருந்தபோது, திடீரென உள்ளே வந்து திரையின் முன்பு தோன்றிய விஷாலை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்தனர். அவர்களிடம் விஷால் பேசியது: ஏற்கெனவே நான் நடித்த ஒரு படத்துக்காக, இந்த தியேட்டருக்கு ரகசியமாக வந்தேன். உங்களோடு அமர்ந்து படம் பார்த்துவிட்டு யாருக்கும் தெரியாமல் சென்றுவிட்டேன். அப்போது திரையில் நான் தோன்றும் காட்சிகளை கைதட்டி வரவேற்றதை கண்டேன். அதேபோல் இப்போதும் நல்ல வரவேற்பு அளித்துள்ளீர்கள். புதிய கோணத்தில் என்னை காட்ட வேண்டும் என்பதற்காக இந்த படத்தில் நடித்தேன். விஷால் இந்த கதாபாத்திரத்துக்கு பொருந்தமாட்டான் என பலரும் கூறினர். ஆனாலும் நம்பிக்கையுடன் நடித்தேன். வெற்றியைத் தேடி தந்துள்ளீர்கள். இது எனது வெற்றி அல்ல, நமது வெற்றி. ரசிகர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. வரும் காலங்களிலும் இதுபோல் நல்ல படங்களில் நடிப்பேன். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது வெற்றிக்கு முக்கிய காரணம். எல்லா ஊரிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சன் பிக்சர்சில் நடித்ததால் ஒரு நடிகனாக, எனக்கு முகவரி கிடைத்துள்ளது. உங்கள் சார்பிலும், எனது சார்பிலும் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறனுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறினார்.
Labels: kollywood tamaka
0 comments:
Post a Comment